தில்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானியும், கிரிக்கெட் இயக்குநராக வேணுகோபால் ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
47 வயதாகும் ஹேமங் பதானி இந்திய அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பயிற்சியாளர் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவரான பதானி உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் பிரபல வேகப் பந்துவீச்சாளர்!
ஹேமங் பதானி
கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஹேமங் பதானி செயல்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்களில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாஃப்னா கிங்ஸின் பயிற்சியாளராக அந்த அணி தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்தார். அதேபோல, தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் அறிமுக சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டம் வெல்ல பேட்டிங் பயிற்சியாளராக அந்த அணிக்கு தனது பங்களிப்பை வழங்கினார். சர்வதேச லீக் டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய துபை கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: நியூசி.க்கு வேகமாக 100 விக்கெட்டுகள்..! சாதனை பட்டியலில் இணைந்த மாட் ஹென்றி!
தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஹேமங் பதானி பேசியதாவது: தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து பயிற்சியாளர் பொறுப்புக்கு என்னை நியமித்த அணியின் உரிமையாளர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.