தில்லி முதல்வர் அதிஷியின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதன்கிழமை (அக்டோபர் 9) தில்லி முதல்வரின் இல்லத்திற்குச் சென்று அவரது உடமைகளையும் கைப்பற்றியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தில்லி முதல்வர் அதிஷியின் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், ”பிளாக் ஸ்டாப் சாலையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம், பாஜகவின் உத்தரவின் பேரில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் தில்லி ஆளுநர் விகே. சக்சேனா, அந்த இல்லத்தை பாஜக தலைவருக்கு ஒதுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் அலுவலகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. முதல்வர் அதிஷியின் உடமைகளும் வீட்டில் இருந்து அகற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வீடு சீல் வைக்கப்பட்டது குறித்து தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “அரவிந்த் கேஜரிவாலின் 'ஷீஷ் மஹால்' சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடம் இருந்து இருந்து ஒப்புதல் பெறாத நிலையில் 'ஷீஷ் மஹாலில்' முதல்வர் அதிஷி எப்படி தங்கினார்?. முன்னாள் முதல்வர் கேஜரிவாலும் அதிஷி அந்த வீட்டில் தங்க வேண்டும் என்று விரும்பினார். அந்த வீட்டில் அப்படி என்ன மறைந்துள்ளது? ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.