“துணை முதல்-அமைச்சர்..” – திருமாவளவன் சொன்ன பதில்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் அவர், மு.க.ஸ்டாலினை துணை முதல்-அமைச்சராக நியமித்தார். கருணாநிதிக்கு ஆட்சி நிர்வாகத்தில் எந்த அளவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணையாக இருந்தாரோ அதேபோல, உதயநிதி ஸ்டாலின் ஆட்சி நிர்வாகப்பணிகளை கவனிப்பதில் பெரும் துணையாக இருப்பார் என்று நம்புகிறேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த இந்த முடிவுக்கு கூட்டணி கட்சி என்ற முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

துணை முதல்-அமைச்சரை நியமிப்பது என்பது ஆளுங்கட்சிக்கு உள்ள உரிமை. அது அவர்களின் சுதந்திரம். தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருமித்த ஒப்புதலோடுதான் இந்த முடிவை எடுத்திருக்க முடியும். எனவே, தி.மு.க.வில் நடைபெறும் விவகாரங்களில் நாங்கள் தலையிட்டு கோரிக்கைகளை எழுப்ப முடியாது. பொதுவாக எளிய மக்கள், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் முக்கியமான அதிகாரங்களுக்கு வர வேண்டும் என்பது வேட்கை. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்மொழியப்படுகின்ற ஒன்றுதான். ஆனால், கூட்டணியாக இருந்தாலும் மற்றொரு கட்சியின் முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது" என்று திருமாவளவன் கூறினார்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals

Navi Mumbai: Mahanagar Gas Conducts Mock Drill At Its City Gate Station In Mahape