தூத்துக்குடி மாநகராட்சியின் காலி இடங்களில் இனி விளையாட்டு மைதானங்கள்: மேயர் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியின் காலி இடங்களில் இனி விளையாட்டு மைதானங்கள்: மேயர் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலியாக உள்ள இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசுகையில், ''கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மண்டல வாரியாக மக்கள் குறைகளை தீர்க்கும் கூட்டம் 4 மண்டலங்களிலும் முதல் சுற்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடக்கு மண்டலத்தில் மொத்தம் பெறப்பட்ட 97 மனுக்களில் 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் 114 மனுக்களில் 77 மனுக்களுக்கும், மேற்கு மண்டலத்தில் 127 மனுக்களில் 108 மனுக்களுக்கும், தெற்கு மண்டலத்தில் 153 மனுக்களில் 27 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 1,51,628 கட்டிடங்கள் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளன. இதில் 87,561 கட்டிடங்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்குரிய கட்டணங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலான குடிநீர் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது. எனவே, மீட்டர் ரேட் கட்டண விகிதங்களை அடுக்கு விகித கட்டணங்களாக (Slab Rate) மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது'' என்றார்.

25 தீர்மானங்கள்: தொடர்ந்து குடிநீர் கட்டண விதி முறையை மாற்றுவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. மேலும், 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி பெற தேவையில்லை என்ற தமிழக அரசின் அரசாணையை தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளித்தார். திமுக உறுப்பினர் கனகராஜ், குடிநீர் கட்டண முறை மாற்றம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு மேயர் விரிவான விளக்கங்களை அளித்தார்.

விளையாட்டு மைதானம்: மேலும், ”பாதாள சாக்கடை கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேக்கமடைந்து, வீடுகளுக்குள் திரும்ப வருகிறது. எனவே, கூடுதல் வாகனங்களை வாங்கி பாதாள சாக்கடையை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்” என திமுக உறுப்பினர்கள் கனகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த மேயர், ”இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் பாதாள சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும்” என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய மேயர், ''தூத்துக்குடியில் மக்கள் பயன்பாட்டில் உள்ள 80 சதவீத சாலைகள் புதிதாக போடப்பட்டுவிட்டன. மீதமுள்ள சாலைகளும், சிறிய சந்துக்களில் உள்ள சாலைகளும் விரைவில் போடப்படும். மாநகராட்சி பகுதியில் 153 பூங்காக்கள் உள்ளன. இவை அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், காலியாக உள்ள இடங்களில் கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

திமுக உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், ''தூத்துக்குடி 2-ம் கேட் அருகே மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் திருமண மண்டபத்துக்கு என்.பெரியசாமி பெயரை வைக்க வேண்டும்'' என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மேயர், ''தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்டெம் பூங்கா, திருமண மண்டபம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு பெயர் வைக்காமல் உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைத்து, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்