தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி அதிகாரிகளிடம் மனுஅளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தவும், நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை முறையாக மேற்கொள்ளவும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களி்ல் ரேபிஸ் தடுப்பூசிகள் போதுமான அளவில் இருப்பில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “உயர் நீதிமன்ற வளாகத்திலேயே நாய்கள் சுற்றித் திரிகின்றன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்க,மற்றொருபுறம் விலங்குகள் பாதுகாவலர்கள் என்ற பெயரில், விலங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்பினர் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல், காதில் ஓட்டைபோட்டுவிட்டு, கருத்தடை செய்யப்பட்டதாக கணக்கு காட்டுகின்றனர்.

இந்த மனு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, பிராணிகள் நலத் துறைச் செயலர்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Related posts

சென்னையில் 6 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சரித்திரப் படம்! ஓய்வு குறித்து பேசிய ஷாருக்கான்! | இன்றைய சினிமா செய்திகள்

அடால்ஃப் ஹிட்லர்