புது தில்லி: தில்லி ஐஐடியில் படித்து வந்த 21 வயது மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவரின் தற்கொலைக் கடிதம் எதுவும் அவரது அறையிலிருந்து கைப்பற்றப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், ஐஐடி தில்லியில் எம்எஸ்சி இரண்டாம்ட ஆண்டு படித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரைச் சேர்ந்த குமார் யாஷ் என்ற அந்த மாணவர், மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், செவ்வாயன்று உடல்நிலை பாதித்து ஐஐடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரவல்லி மாணவர் விடுதியில், மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குக் காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், ஐஐடி மாணவர்களும், ஊழியர்களும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மாணவரை காப்பாற்ற முயன்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க.. ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!
இரண்டு டவல்களை இணைத்து, குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தவிட்டனர்.
அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தங்கியிருந்த அறையையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.