ஆயுதப் பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆயுதப் பூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி நாள்கள் எனத் தொடர்ந்து 3 நாள்கள் நாளைமுதல் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெரும்பாலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ரயில்களில் தென் மாவட்டங்களுக்கான முன்பதிவு பயணச்சீட்டுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
இதையும் படிக்க : ஒரு சகாப்தத்தின் முடிவு! ரத்தன் டாடா கொண்டாடப்படுவது ஏன்?
இந்த நிலையில், வழக்கமாக விற்கும் கட்டணத்தைவிட சென்னையில் இருந்து வியாழக்கிழமை புறப்படும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கமாக ரூ. 5,000 வரை விற்கப்படும் நிலையில், இன்று ரூ. 16,000 வரை விற்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானங்களின் கட்டணம் ரூ.3,300-இல் இருந்து ரூ. 13,000 வரை இணையதளத்தில் விற்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில், கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு ரூ. 3,000 வரை பயணச்சீட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
இதனால், விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.