தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'பலரால் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு தலைவரான பாபா சித்திக் மறைந்தது, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு. தனிப்பட்ட முறையில், நான் பல ஆண்டுகளாக அறிந்த ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். நாங்கள் அடைந்துவிட்டோம். இந்தச் சம்பவத்தின் கொடுமையைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம். இது ஒரு அரசியல் இழப்பு மட்டுமல்ல. தனிப்பட்ட முறையில் நம் அனைவரையும் உலுக்கிய சோகமான நிகழ்வு.
இந்த பயங்கரமான நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது பிரிவினைக்கான நேரமோ மற்றவர்களின் வலியை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் நேரமோ அல்ல. அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதில் நமது கவனம் இருக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களை அறியும்வரை ஓயமாட்டோம்.
மிகப்பெரிய இழப்பை சந்தித்த பாபா சித்திக் குடும்பத்தின் துயரத்தை நாம் மதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த அவலத்தை அரசியலாக மாற்ற சந்தர்ப்பவாத குரல்களை அனுமதிப்பதைவிட மரியாதை, கருணை காட்டுவோம்.
இது ஒற்றுமைக்கான நேரம், பலரால் போற்றப்பட்ட ஒரு தலைவரை நினைவுகூர வேண்டிய நேரம் இது' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க |பாபா சித்திக் கொலை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் சதித்திட்டம்!
பாபா சித்திக் கொலை
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் அவரது மகனும் எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தொடர்ந்து, அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் மருத்துவமனையில் குவியத் தொடங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 3 நபர்கள் ஈடுபட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (23) மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் காஷ்யப் (19) ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மூன்றாவது நபரான உ.பி.யைச் சேர்ந்த ஷிவ் குமார் என்பரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.