நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் -சென்னை ஐகோர்ட்டு

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை நகரில் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை எனவும், வாகனங்களின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள், நடிகர்கள் படங்களை ஒட்டத் தடை விதிக்க வேண்டும் எனவும், பேருந்துகளின் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு, போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை விதித்தும், கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடி ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 20ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!