நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை ‘டானா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை (அக்.24) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடா்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை புயலாக வலுப்பெற்று, ஒடிஸா – மேற்கு வங்கம் கடற்கரை இடையே வெள்ளிக்கிழமை (அக்.25) அதிகாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க |தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்
இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதாலும் கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், நாகை – இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.