நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ சேவை: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைக்க உள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு ரயில்வேயின் (அகமதாபாத் கோட்டம்) மக்கள் தொடா்பு அதிகாரி பிரதீப் சா்மா சனிக்கிழமை கூறுகையில், ‘குஜராத்துக்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமா் மோடி, அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவையை திங்கள்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ சேவையானது முற்றிலும் முன்பதிவில்லாத குளிா்சாதன வசதிகொண்ட ரயிலாகும். இதற்கான பயணச்சீட்டை ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக பயணச்சீட்டு மையங்களில் பயணிகள் வாங்கிக்கொள்ளலாம்.

1,150 பயணிகள் அமரும் வசதிகொண்ட இந்த ரயிலில், 2,058 பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கலாம். 9 ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ரயில், 360 கி.மீ. தொலைவை 5 மணிநேரம் 45 நிமிஷங்களில் சென்றடையும்.

வந்தே பாரத் ரயில் சேவையை பின்பற்றி வந்தே மெட்ரோ ரயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையில் விபத்துகளை தடுக்கும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான ‘கவச்’ உள்பட அதிநவீன அம்சங்கள் உள்ளன’ என்றாா்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்