நடிகர் துல்கர் சல்மான் நடிகர் அஜித்குமார் குறித்து பேசியுள்ளார்.
துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான, புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், நடிகர் துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் இயக்குநர் வெங்கட் அட்லுரி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர், துணை நடிகரான ராம்கி உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து, துல்கர் சல்மான் பேசியபோது, “லக்கி பாஸ்கர் திரைப்படம் இந்திய குடும்பங்களின் கதையாகவே உருவாகியிருக்கிறது. பாஸ்கர் என்கிற கதாபாத்திரத்தை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். இந்தாண்டில் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டது. அதனால், தெலுங்கு மற்றும் மலையாளத்தின் டப்பிங் முடித்துவிட்டேன். தமிழ் டிரைலரில் நான் டப்பிங் பேசவில்லை ஆனால், திரைப்படத்தில் என் குரல்தான் இருக்கும்.” என்றார்.
இதையும் படிக்க: ராவணனாக நடிக்கிறேன்: யஷ்
மேலும், மங்காத்தா படத்தை நினைவுப்படுத்தும் விதமாக டிரைலரில் காட்சிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆண் ரசிகர்களைப் பெறுவதற்காக அஜித்தைப் பின்தொடர்ந்து வருகிறீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, துல்கர் சல்மான், “நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். எதுவும் திட்டமிட்டு செய்ய முடியாது. அஜித்குமார் மாதிரி யாரும் வரமுடியாது. என்னாலும் முடியாது. அவர் அப்படியே இருக்க வேண்டும்.” எனப் பதிலளித்தார்.