நாளை உருவாகும் ‘டானா புயல்’ – 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தொடர்ந்து, நாளை 'டானா' புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 25-ந்தேதி அதிகாலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளை உருவாகும் 'டானா புயல்' தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, கரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள சூழலில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!