காங்கிரஸ் கட்சியிலுள்ள தலைவர்கள் அடுத்தடுத்து நில முறைகேடுகளில் சிக்கி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று (அக். 1) விமர்சித்தார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது,
''நில விவகார சர்ச்சைகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிக்கிக்கொள்வது ஏன்?
பூபேந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போதே நில விவகாரம் குறித்த சர்ச்சை வெளிச்சத்துக்கு வந்தது. கர்நாடகத்தில் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நில முறைகேடு செய்ததாக சித்தராமையா மீது காவல் துறையும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தின் மீதும் நில முறைகேடு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நில விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக இருப்பது ஏன்? கார்கே குடும்பத்துக்கு நிலம் வழங்கப்பட்டதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். ஆனால் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். அதனால், அவரும் காங்கிரஸ் கட்சியும் இதற்கு பதிலளிக்க வேண்டியது கட்டாயம்.
கார்கே, ராகுல் பதிலளிப்பார்களா?
மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு கேள்வி கேட்பது அவர்களின் உரிமை.
இதேபோன்று அவர்கள் மீது சுமத்தப்பட்ட முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் பதில் அளிக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நில அபகரிப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேற்கு வங்க விவகாரத்தில் ராகுல் காந்தி எந்த கருத்தையும் கூறாமல், வாய் மூடி உள்ளார். தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை மேற்கு வங்க அரசுக்கு ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்'' என பிரசாத் குறிப்பிட்டார்.
படிக்க |ராகுல் மீதான அவதூறு வழக்கு: அக்.9-க்கு ஒத்திவைப்பு!