நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு

நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டிள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் வளவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்-ஆனந்தி தம்பதியரின் மகள் புனிதா, அண்மையில் நடந்த அரசு பாரா மெடிக்கல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்விலும் இடம் கிடைக்காத விரக்தியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு வியாழக்கிழமை வந்த அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாணவியின் தாயாரிடம் அதிமுக சார்பில் கட்சி நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்தை வழங்கினார். அப்போது மாணவியின் தங்கை மற்றும் தாயாரிடம் மனம் தளராமல் இருக்குமாறு ஆறுதல் கூறினார்.

இதையும் படிக்க : பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் உள்ளூர் புகார் குழு: அதிரடி உத்தரவு!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த தேர்தலின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் உள்ளது என கூறினார். ஆனால் இதுவரை அது என்ன ரகசியம் என்று கூறவில்லை.

மேலும் நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரசும்,திமுகவும் அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுவதாகவும், ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம்.

நீட் தேர்வு ரத்துக்காக கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த கடிதங்களை மக்கள் காலடியில் போட்டுவிட்டு நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக அரசின் செயல்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக