நீட் மறுதேர்வு: பலர் எழுதவில்லை! சுமார் 48 சதவீதம் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நீட் தோ்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கும் மறுதேர்வு நாடு முழுவதும் 7 மையங்களில் இன்று(ஜூன் 23) நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.20 மணிக்கு முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், நீட் மறு தேர்வு எழுத மாணவர்கள் பலர் வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கரில் மட்டும் 70 பேர் தேர்வெழுத வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் பாலோட்டில் 185 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில், 115 மாணவர்கள் தேர்வு எழுதினர். 70 பேர் தேர்வெழுத வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, பல மையங்களில் மாணவர்கள் பலர் தேர்வெழுத வரவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள பதிவில், 1,563 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வில் 813 பேர் மட்டுமே தேர்வெழுத வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்குப் பாதி, சுமார் 48 சதவீதம் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே பிகார் மாநிலத்தில் மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ள 17 மாணவர்கள் மீது இன்று(ஜூன் 23) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் இனி நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது.