கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க அரசால் நீதி வழங்க முடியாததை பாஜக அமைச்சர் விமர்சித்துள்ளார்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி, மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டும் வரும் முயற்சியில் மேற்கு வங்க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி “மமதா பானர்ஜியால் செயல்பட முடியவில்லை. அவரால் அரசையும் ஏற்று நடத்த முடியவில்லை. பெரும்பான்மை சமூகத்திற்கு அவரால் நீதி வழங்க முடியவில்லை. ஆகையால், அவர் போய்விடுவதுதான் நல்லது. அவர் என்ன அறிக்கை அளித்தாலும், அது ஓர் அரசியல் நாடகம்தான்’’ என்று கூறியுள்ளார்.
கேள்வி கேட்டால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்: அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் கடும் கண்டனம்!
இதற்கிடையில், பாஜக தலைவர் ரூபா கங்குலியும் மமதா பானர்ஜியை பதவி விலக வலியுறுத்தியதுடன், “நாளைய தினத்தை நல்ல செய்தியுடன் தொடங்குவோம்’’ என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவைச் சேர்ந்த திலீப் கோஷ் “நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழும்புகிறது. டைமண்ட் துறைமுகத்தில் நீதிபதிகள் மிரட்டப்படுகிறார்கள்; அவர்கள் தங்கள் வீடுகளிலும் அச்சுறுத்தப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் வியாழக்கிழமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது “ஆர்.ஜி. கர் மருத்துவமனை பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டும். மக்களுக்காக, நான் ராஜிநாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.