நெசவாளா்களுக்கு தள்ளுபடி மானியத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
நெசவாளா்களுக்கான மானியத்தொகை தொடா்பாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படாமல் விட்டுச் சென்ற நிலுவைத் தொகை ரூ.160 கோடியை திமுக அரசு பொறுப்பேற்றதும் முழுமையாக விடுவித்தது. மேலும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.318.11 கோடியும், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.200 கோடியும், 2023-24-ஆம் ஆண்டில் ரூ.250 கோடியும் நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
852 தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸுக்கு தள்ளுபடி மானியத் தொகை விடுவித்து வழங்கியுள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் கோரியுள்ள தள்ளுபடி மானியக் கோரிக்கைகளை களஆய்வு செய்து ஆய்வுக்குப் பிறகு தகுதியான கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்.
அதன்பிறகு மானியத் தொகை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.