அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: சென்னையில் 8 விமானங்கள் ரத்து!
இந்நிலையில், பகல் 1 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.