படகுகள் மோதியதில் இலங்கை வீரர் பலி! தமிழக மீனவர்கள் 10 பேர் கைதுதமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதல்!
இலங்கை கடற்படை வீரர் கடலில் விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரைபேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை 4-மணியளவில் 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
மீனவ கிராமமான திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் ஆனந்தன்(52) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், இன்று(ஜூன் 25) அதிகாலை 1.30 மணியளவில் கோடியக்கரைக்கு கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசம் துறைமுகம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் விபரம்:
1.மதி (38) – அக்கரைபேட்டை
2.ராஜேஷ் (35) – அக்கரைபேட்டை
3.முத்து செட்டி (70) – அக்கரைப்பேட்டை
4.வைத்தியநாதன் (45) – வானவன் மாதேவி
5.மணிபாலன் (55) – கடலூர்
இவர்களுடன் சேர்த்து படகில் பயணித்த கீச்சாங்குப்பம், டாட்டா நகர், வானவன்மாதேவி, கங்கால கொருலையா(ஆந்திர பிரதேசம்) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை கடற்படை மீனவர்கள் படகை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது, மீனவர்களின் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், படகு வேகமாக மோதியதில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த ரத் சிங் என்ற தகவலை இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.