பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு தாமதம்: பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்த உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு தாமதம்: பசுமை தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்த உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

மதுரை: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கான இழப்பீடு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.

விருதுநகர் மாவட்டம் காசிரெட்டிபட்டியை சேர்ந்த விஜய் என்ற பீமா ராவ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘விருதுநகர் அச்சங்குளம் ஸ்ரீமாரியம்மன் பட்டாசு ஆலையில் 2021-ல் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, 8 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரித்தது. பின்னர், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம், 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சம், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம், சிறுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, “தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளுக்கு ரூ.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவும், சிறை தண்டனை வழங்கவும் பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்