காவல் கண்காணிப்பில் இருந்த பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த யோகேஷ், பத்திரிகையாளர்களுடன் பேசும் விடியோ வைரலானதால், காவலில் இருந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் யோகேஷ் என்பவரை உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் துப்பாக்கிகளைக் கையாளுவதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ரீஃபைனரி காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த யோகேஷ், அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களிடமும், ஊடகக் குழுவினரிடமும் பேசியுள்ளார்.
இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து, யோகேஷுடன் காவலில் இருந்த இரு கான்ஸ்டபிள்கள் உள்பட துணை ஆய்வாளர் ராம்சானேஹி மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே அக். 12 ஆம் தேதி, இரவு மூன்று போ் துப்பாக்கியால் சுட்டனா். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தார்.
பாபா சித்திக்குக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தபோதிலும், இவ்வாறான சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூலில் பதிவிட்டது.
இந்த வழக்கில் இதுவரையில் 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீதான கொலை முயற்சியைக் கைவிட வேண்டுமானால், ரூ. 5 கோடி தரவேண்டும் என்றும் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளனர்.