தாணே மாவட்டத்தில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட பத்லாபூர் பள்ளியில் கடந்த 15 நாள்களுக்கான சிசிடிவி காட்சிகள் காணவில்லை என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தீபக் கேசர்கார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் பத்லாப்பூர் பகுதியில் ஒரு பள்ளியில் படித்து வந்த 4 வயதான 2 சிறுமிகளை, பள்ளியில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து வந்த அக்ஷய் ஷிண்டே, கடந்த ஆக. 12, 13 தேதிகளில் கழிப்பறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து, அக்ஷய் ஷிண்டே (23) மீது ஆக. 16, வெள்ளிக்கிழமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆக. 17-ல் கைது செய்யப்பட்டார். இருப்பினும், குற்றத்திற்கு பதிலளிப்பதில் காவல்துறை தரப்பிலிருந்து தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தாணே மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்லாபூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட மக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்… சொல்லப் போனால்
இந்நிலையில், பத்லாபூர் பள்ளியில் கடந்த 15 நாள்களுக்கான சிசிடிவி காட்சிகள் காணவில்லை என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தீபக் கேசர்கார் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இப்பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சியைச் சேர்ந்த எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது, எதிர்பார்த்தது போன்றே பாதல்பூர் பள்ளியில் சம்பவம் நடந்த அன்றைய நாளின் சிசிடிவி காட்சிகள் காணவில்லை. அமைச்சர் தீபக் கேசர்காரை குறிப்பிட்டு, இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் இருந்து தப்பிக்க பள்ளியை எப்படி அனுமதிக்க முடியும். மாநில அரசுடனான பள்ளி நிர்வாகத்தின் தொடர்பு இதற்கு காரணமா? என சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.