பந்துவீச்சில் சிலரை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை: ரோஹித் சர்மா

பந்துவீச்சில் தனிப்பட்ட சில வீரர்களை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: தனது சாதனைகளால் ஜெய்ஸ்வால் மகிழ்ச்சியாக இல்லை: ரோஹித் சர்மா

வேகப் பந்துவீச்சாளர்கள் குழு வேண்டும்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைய தாமதம் ஆகிறது. அதேபோல வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, வேகப் பந்துவீச்சாளர் யஷ் தயாளுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியில் பேட்டிங் மிகவும் வலுவாக இருக்கிறது எனவும், அதேபோல வேகப் பந்துவீச்சு வரிசையையும் வலுப்படுத்த விரும்புகிறோம் எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை நிறைய தெரிவுகள் இருக்கின்றன. பந்துவீச்சிலும் அதேபோல அதிக வீரர்களை உருவாக்க விரும்புகிறோம். அதிக அளவில் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, நாளை போட்டியின்போது வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் கவலையடையத் தேவையில்லை.பந்துவீச்சில் சில வீரர்களை மட்டும் அதிக அளவில் நம்பியிருக்க நாங்கள் விரும்பவில்லை. அது சரியான விஷயமும் இல்லை. அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நிறைய சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டும்.

இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்: பாட் கம்மின்ஸ்

அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு சில போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அவர்கள் துலிப் கோப்பை, இரானி கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளனர். இளம் வீரர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களது வேலைப்பளு மேலாண்மையில் சரிவர கவனம் கொடுக்க வேண்டும் என்றார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது