பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்று பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் உலகத் தலைவர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகமே, போர், மோதல்கள், பொருளாதார நிலையற்றத் தன்மை, வானிலை மாற்றம், பயங்கரவாதம் போன்றவற்றால் சூழப்பட்டிருக்கும் நிலையில், இந்த மாநாடு கூடியிருக்கிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்கள் பரப்புதல் போன்றவையும் அதிகரித்துள்ளன. இதனால், பிரிக்ஸ் மாநாட்டின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும், மிகவும் கவலைதரும் விஷயமான பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு என்பதே இருக்க முடியாது என்று மோடி கூறினார்.
இந்தியா, பிரேஸில், ரஷியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்ச மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ கருப்பொருளில் இந்த உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக ரஷியா சென்ற பிரதமா் மோடி, கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அதிபா் புதினை சந்தித்து, இருதரப்பு உறவு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.