“பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுபான கடைகளை அமைப்பது ஏன்?” – அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

“பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுபான கடைகளை அமைப்பது ஏன்?” – அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுபான கடைகளை அமைப்பது ஏன் என அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடச்சபுரத்தைச் சேர்ந்த ஞானமுத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘சாத்தான்குளம் தாலுகா முதலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு உள்ளாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதனை அடுத்து, ஊராட்சிமன்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், ஏற்கெனவே கடை அமைந்த இடத்திற்கு எதிர்ப்புறத்தில் கடை திறந்துள்ளனர்.

வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகளை அமைப்பது சட்டவிரோதமானது. எனவே தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள இடங்கள் மதுபான கடைகளை வைப்பதற்காக தேர்வு செய்யப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், “6 மாதங்களுக்குள்ளாக, அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படும்” என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வழக்கு தாக்கல் செய்யப்படும் போது டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஆகவே 3 மாதங்களுக்குள்ளாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்