லட்டு குறித்து பேசியதற்காக பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி.
மெய்யழகன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று (செப். 23) நடைபெற்றது. இப்படம் தெலுங்கில் ’சத்யம் சுந்தரம்’ என்கிற பெயரில் வெளியாகிறது.
நிகழ்வில், தொகுப்பாளர் கார்த்தியிடம், ’உங்களுக்கு லட்டு வேணுமா?’ எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி ‘இங்கு லட்டு குறித்து பேச வேண்டாம். உணர்ச்சிமிக்க விஷயம். லட்டு வேண்டாம்… தவிர்த்துவிடுவோம்” என்றார். இதைக்கேட்ட பலரும் கார்த்தியுடன் சேர்ந்து சிரித்தனர்.
தொடர்ந்து, கோவிலில் விரதமிருக்க வந்த நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பத்திரிகையாளர் சந்திப்பில், ”சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க (sensitive) விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்.” என கண்டனம் தெரிவித்தார்.
லட்டுவை கிண்டல் செய்வதா? கார்த்திக்கு பவன் கல்யாண் கண்டனம்!
இதனால், சமூக வலைதளங்களில் கார்த்தி வைரலானார். மேலும், இச்சர்ச்சையால் மெய்யழகன் படத்தின் ஆந்திர வெளியீட்டில் சிக்கல் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள், நடிகர் கார்த்தி எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அன்புள்ள பவன் கல்யாண் சார். உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். நான் பேசியது எதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். வெங்கடேஸ்வரரின் பக்தனாக, பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன். வாழ்த்துகள்” என பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டு சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.