புதுடெல்லி,
பாகிஸ்தானில் இன்று நண்பகல் 12.58 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது, பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, வீடுகள் மற்றும் அலுவகங்களில் இருந்து வெளியே வந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.
கடந்த இரண்டு வாரங்களில் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்படுவது இரண்டாவது முறையாகும். ஆகஸ்ட் 29-ம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.