அமெரிக்காவில் தான் பேசியது குறித்து பாஜக பொய்களை பரப்பி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பலதரப்பட்ட மக்களுடன் உரையாடினார்.
அப்போது வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டமொன்றில் சீக்கியர்கள் குறித்துப் பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | அயோத்தி ராமர் கோயில் விழாவில் திருப்பதி லட்டு வழங்கப்பட்டதா? – அர்ச்சகர் தகவல்!
இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில்,
'அமெரிக்காவில் நான் கூறிய கருத்து தொடர்பாக பாஜக பொய்களை பரப்பி வருகிறது.
நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? என இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதர, சகோதரிகளையும் நான் கேட்க விரும்புகிறேன்.
ஒவ்வொரு சீக்கியரும் ஒவ்வொரு இந்தியரும் அச்சமின்றி தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா?
வழக்கம் போல் பாஜக பொய்களை பயன்படுத்துகிறது. உண்மையைச் சகித்துக்கொள்ள முடியாததால் என்னை மௌனமாக்கத் துடிக்கிறார்கள்.
ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை, சமத்துவம், அன்பு என இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்' என்று பதிவிட்டு அமெரிக்காவில் தான் பேசிய விடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படும் பதின்வயதினர்! ஏன்? தீர்வு என்ன?
அமெரிக்காவில் ராகுல் பேசியது:
'சில மதங்கள், மொழிகள், சமூகங்களை ஆர்எஸ்எஸ் மற்றவர்களைவிட தாழ்வாகப் பார்க்கிறது. இந்தியாவில் இதற்குத்தான் சண்டை நடக்கிறது. அரசியலுக்கானது அல்ல' என்று பேசினார்.
மேலும் அங்கிருந்த சீக்கியர் ஒருவரிடம், 'இந்தியாவில், ஒரு சீக்கியர், தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது குருத்வாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்கே சண்டை நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்' என்று கூறினார்.