உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வை வழக்குரைஞர் ஒருவர் காவல் துறையினருக்கு மத்தியில் கன்னத்தில் அறைந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ.வை அறைந்த வழக்குரைஞரை அவரது ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர்.
பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள சதர் தொகுதி எம்.எல்.ஏ. யோகேஷ் வெர்மாவை கன்னத்தில் அறைந்த வழக்குரைஞர் உள்ளூர் பார்கவுன்சில் கூட்டமைப்பின் தலைவர் அவதேஷ் சிங் எனத் தெரியவந்துள்ளது.
பிரச்னைக்கு காரணம் என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் நகர்ப்புற கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று (அக். 9) அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனுவைத் திரும்பப் பெற நாளை (அக். 10) கடைசி நாள். இறுதிப் பட்டியல் நாளை மறுநாள் (அக். 11) வெளியிடப்படவுள்ளது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க 12 ஆயிரம் பேர் தகுதியுடையவர்கள் என புள்ளி விவரம் கூறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமடைந்துவரும் நிலையில், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சுனில் சிங், எம்.எல்.ஏ. யோகேஷ் வெர்மா பெயரிடப்பட்ட கடிதம் ஒன்று பரவலாக பகிரப்பட்டு வந்தது.
இதையும் படிக்க | தில்லி முதல்வர் அதிஷி அதிகாரபூர்வ இல்லத்துக்கு சீல் வைத்ததால் பரபரப்பு!
தேர்தல் ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அதில் குற்றம் சாட்டியிருந்தனர். இதுவே இப்பிரச்னைகு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த மாவட்ட கூடுதல் நீதிபதி சஞ்சய் சிங், திட்டமிட்டபடி நகர்ப்புற கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும், வெளிப்படைத்தன்மையுடன் மிகவும் நேர்மையாகத் தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.