‘பாஜக பயங்கரவாதிகளின் கட்சி’ – கார்கே பதிலடி!

பாஜகதான் பயங்கரவாதிகளின் கட்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (அக். 5) மகாராஷ்டிரத்தில் வாஷிம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, 'நகர்ப்புற நக்சல்களால் காங்கிரஸ் இயங்குகிறது. இந்தியாவுக்கு தீங்கு நினைக்கும் சக்திகளுடன் அக்கட்சி மிக நெருக்கம் காட்டுகிறது' என்று கூறியிருந்தார்.

அடுத்து அக். 9 ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் கலந்துகொண்ட நிகழ்விலும் காங்கிரஸ் கட்சியை 'நக்சல்கள்' என்று குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி.

இதையும் படிக்க | ‘6 நாள்களுக்கு ஒரு ரயில் விபத்து; ஆய்வு மட்டுமே நடக்கிறது’- சு.வெங்கடேசன்

இதற்கு பதில் அளிக்கும் விதமாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

"முற்போக்கு மக்களை 'நகர்ப்புற நக்சல்கள்' என்று கூறுகின்றனர் பாஜகவினர். அது அவர்களின் வழக்கம். உண்மையில் பாஜகதான் பயங்கரவாதிகளின் கட்சி. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினரை அடிக்கிறார்கள், அடித்துக் கொலை செய்கிறார்கள், அந்த மக்களின் வாயில் சிறுநீர் கழிக்கிறார்கள், பழங்குடியின மக்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இதையெல்லாம் செய்பவர்களை ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

எங்களை நக்சல்கள் என்று சொல்வதற்கு பிரதமர் மோடிக்கு உரிமையில்லை. பிரதமர் மோடி அரசு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாக பழங்குடியினர் மீதான வன்முறைகள் நடக்கின்றன. ஆனால், அதே வன்முறைகள் குறித்துதான் பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், நீங்கள் அதனைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!