பாபா சித்திக்கின் மகனைக் கொல்லவும் திட்டம்! குற்றவாளிகள் வாக்குமூலம்

பாபா சிக்திக்கை கொலை செய்த குற்றவாளிகள் அவரது மகன் ஜீஷன் சித்திக்கையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் குர்மில் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் சிங் காஷ்யப் ஆகியோரை அன்றிரவே காவல்துறையினர் கைது செய்தனர். மூன்றாவது நபரான ஷிவ் குமாரை இன்று கைது செய்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றுள்ளது.

இதையும் படிக்க : பாபா சித்திக் வழக்கு: அக். 21 வரை காவல்! கைதானவர் சிறுவனா?

குற்றவாளிகள் வாக்குமூலம்

முதலில் கைது செய்யப்பட்ட இருவரையும் மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஒருவரை மட்டும் அக். 21 ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்கட்ட விசாரணையில் குற்றவாளி அதிர்ச்சித் தகவலை காவல்துறையிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மும்பை போலீஸ் கூறுகையில், ”ஜீஷன் சித்திக்கிற்கு கடந்த சில நாள்களுக்கு முன்னதாகவே கொலை மிரட்டல் வந்துள்ளது. குற்றவாளியிடம் விசாரணை நடத்தியதில், பாபா சித்திக் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகிய இருவரையும் கொலை செய்யவே ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. யாரை பார்த்தாலும் சுடச் சொல்லி இருந்தார்கள். பாபா சித்திக்கை பார்த்ததால் அவரை சுட்டுவிட்டு தப்பித்துவிட்டோம்” என்று விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஜீஷன் சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது