பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது.

பாபா சித்திக் வழக்கில் அக். 18ஆம் தேதி மேலும் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்பு கைது செய்யப்பட்ட 4 பேருக்கு போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாபா சித்திக் கொலை

தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு அக். 12 ஆம் தேதி இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் குர்மில் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் சிங் காஷ்யப் ஆகிய இருவரைக் கைது செய்தது.

பின்னர் புணேவைச் சேர்ந்த பிரவீன் லோன்கர் (28) என்பவரை மும்பை குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க | லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! – ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

இதனைத் தொடர்ந்து, ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் மற்றும் கர்ஜத் ஆகிய இடங்களில் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் பாபா சித்திக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் 5 பேரில் ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனும் தொடர்பில் உள்ளவர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்பு கைது செய்யப்பட்டவர்களுக்கான போலீஸ் காவல் இன்றுடன் முடிந்ததால், குற்றப் பிரிவு அதிகாரிகள் அவர்களை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றப் பிரிவு காவல் துறையின் கோரிக்கையை ஏற்று அக். 25 வரை காவலை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி