பாபா சித்திக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3வது நபருக்கு அக். 21ஆம் தேதி வரை விசாரணைக் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் இன்று (அக். 14) உத்தரவிட்டது.
பாபா சித்திக் கொலை வழக்கில் நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மற்றொரு நபரை மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
நேற்று கைதான இருவரில் ஒருவருக்கு அக். 21 வரை காவல் விதிக்கப்பட்டிருந்தது. மற்றொரு நபர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்பதால், வயதை உறுதி செய்யும் மருத்துவப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை (அக். 12) இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் குர்மில் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் சிங் காஷ்யப் ஆகிய இருவரைக் கைது செய்தது.
இதில் குர்மாயில் சிங்கிற்கு அக். 21ஆம் தேதி வரை விசாரணைக் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. தர்மராஜ் சிங் காஷ்யப் 18 வயது பூர்த்தி அடையாதவர் எனக் கூறப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் எலும்பு மற்றும் திசு பரிசோதனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தப் பரிசோதனையின் மூலம் நபரின் வயதை அறிய முடியும்.