பாம்பன் புதிய ரெயில் பால பணி செப்டம்பரில் முடியும்: அதிகாரி தகவல்

சென்னை,

பாம்பன் புதிய ரெயில் பால பணி செப்டம்பரில் முடியும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.ம்சென்னையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ள சென்னை எழும்பூர், சென்டிரல், கன்னியாகுமரி, தாம்பரம், காட்பாடி, ராமேசுவரம், நெல்லை மற்றும் கும்பகோணம் ஆகிய ரெயில் நிலையங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.150 கோடி முதல் ரூ.700 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் – கடற்கரை வரையிலான 4-வது வழித்தடப் பணி செப்டம்பர் மாதம் முடிவடையும்.

ராமேசுவரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அக்டோபர் முதல் ராமேசுவரம் – மண்டபம் இடையே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 ரெயில்வே மேம்பால திட்டப்பணிகளில் ரெயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னையில் ஏற்கனவே எழும்பூர், சென்டிரல், தாம்பரம் என 3 ரெயில் முனையங்கள் உள்ளன. 4-வது புதிய ரெயில் முனையம் வில்லிவாக்கத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், போதிய இடவசதி இல்லாததால் பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் அமைக்கப்படவுள்ளது. ரெயில்வேக்கு சொந்தமான இடங்கள் இருப்பதால் நிலம் எடுப்பதில் தாமதம் ஏற்படாது. பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால் பெரம்பூரில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான திட்டமிடல், வரைபடம் தயாரித்தல், நில அளவை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பணிகள் ஒரு மாதத்தில் முடிந்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். தற்போது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போக தேவையான நிதியை அவ்வப்போது கேட்டு பெறுவோம். கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலைய பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி