பிக் பாஸ் 8-ஆவது சீசன் ஆரம்பமான நாள் முதலே பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. பிக் பாஸ் தொகுப்பாளராக முதல்முறையாக நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமாகியுள்ளது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக் பாஸ் 18 புது போட்டியாளர்களுடன் களைகட்டியுள்ளது.
போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக, பிக் பாஸ் தொடங்கியுள்ள 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற விஷயத்தை விஜய் சேதுபதி கூறியிருந்தார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது நாளிலேயே சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார்.
சரி இன்றைய நாளில் நிகழ்ந்த சுவாரசியங்களைக் காண்போம்..
ப்ரோமோவில் காட்டப்பட்டதை போன்றே.. ரவீந்தருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே கடுமையான சண்டை உண்டானது. வாய்ச் சண்டை மோதலாக மாற, பெண் போட்டியாளர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
இவர்களுக்கிடையேயான சண்டையில் அருண் பிரசாத் தடுமாறி கீழே விழுந்துவிட்டு அடிபட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
இதைத்தொடர்ந்து, இச்சம்பவம்தான் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களின் இன்றைய தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. அவர்களுக்குள் நடத்திய ஆலோசனையின்படி, ரஞ்சித்தையும் ரவீந்தரையும் மன்னிப்பு கேட்க வைத்து நட்பாக பழக வைக்க முடிவெடுத்தனர்.
இதனிடையே ‘நாங்க சும்மாதான், சண்டை போடுவது மாறி நடித்தோம்.. எங்களுக்குள் எந்த பிரச்னையுமில்லை’ என்று ஒரேயடியாக உண்மையை போட்டுடைத்தனர் ஆண் போட்டியாளர்கள். இதைக் கேட்டுவிட்டு, அடப்பாவிகளா! என்று ஒருகணம் பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்ததையும் பார்க்க முடிந்தது.
ரஞ்சித் ஒருபடி மேலே போய் பெண்களின் காலைத் தொட்டு வணங்கி மன்னிப்புக் கேட்டது, அனைவரையும் சிரிக்கவும் வைத்ததுடன் கவலையையும் மறக்கச் செய்வதாக அமைந்துவிட்டது.
ஆனால் என்ன… ஜாக்குலின்தான் இதையெல்லாம் பார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார். பிற பெண்களும் சற்று ஆத்திரமடைந்திருந்தை அவர்களது முக பாவனைகள் காட்டி கொடுத்தன. அடுத்து என்ன? தொடர்ந்து காணலாம்…