பிரியங்கா காந்தி முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி(52) போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா கூறுகையில், 'பிரியங்கா இப்போது அவருக்காக சிந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கடினமாக உழைக்கக்கூடியவர். எனக்கு 35 ஆண்டுகளாக அவரைத் தெரியும். அவர் தனது குடும்பத்திற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் கடினமாக உழைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
பிரியங்கா அவருக்காக எதுவும் யோசித்தது இல்லை. தற்போது வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜீவ் காந்தி இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?
பிரியங்காவின் முதல் தேர்தல்
மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். நேற்று(அக். 23) அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பிரியங்கா தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.