நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இடையே போட்டி நிலவுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிக்க: இந்த முறை மிஸ் ஆகாது; இந்தியாவுக்கு சவால் விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?
பிளேயிங் லெவனில் யார்?
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அணியில் கூடுதலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் போட்டியில் கழுத்து வலியின் காரணமாக விளையாடாத ஷுப்மன் கில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாராக இருக்கிறார்.
முதல் போட்டியில் ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கான் இடம்பெற்று விளையாடினார். இக்கட்டான சூழலில் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு வர சர்ஃபராஸ் கான் சதம் விளாசி உதவினார். ஷுப்மன் கில் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கான் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்; முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை!
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இடையே போட்டி நிலவுகிறது என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் உள்ளனர். இதில், மறைப்பதற்கு ஒன்றுமில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கே.எல்.ராகுல் பேட்டிங் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை. அவர் நன்றாக பேட் செய்கிறார். டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் அணிக்கு மிகவும் முக்கியம் என கௌதம் கம்பீர் நினைக்கிறார் என்றார்.
இதையும் படிக்க: காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்! -ரசிகர்கள் அதிர்ச்சி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சர்ஃபராஸ் கான் முதல் இன்னிங்ஸில் 0 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களும் எடுத்தார். கே.எல்.ராகுல் முதல் இன்னிங்ஸில் 0 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.