புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை : அமெரிக்க வட்டி விகிதம் குறையும் என்ற நம்பிக்கையும், அன்னிய முதலீடுகள் வருகை மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்தாலும் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தனது வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 359.51 புள்ளிகள் உயர்ந்து 82,725.28 புள்ளிகள் என்ற புதிய சாதனை உச்சத்தை தொட்டது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 97.75 புள்ளிகள் உயர்ந்து 25,333.65 புள்ளிகளை எட்டியது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 194.07 புள்ளிகள் உயர்ந்து 82,559.84 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 42.80 புள்ளிகள் உயர்ந்து 25,278.70 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் பஜாஜ் பின்சர்வ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி, டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்திலும் மறுபுறம் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில், சியோல் உயர்ந்தும், அதே நேரத்தில் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்தது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.5,318.14 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.82 சதவிகிதம் குறைந்து 76.30 அமெரிக்க டாலராக உள்ளது.

கடந்த வாரம் எஃப்ஐஐ-கள் பங்குகளை வாங்குபவர்களாக மாறியதால் சந்தையில் மேம்பட்ட உணர்வு பற்றிக்கொண்டது என்று ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு ஆலோசகர் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts

அலெக்ஸ் கேரி, ஸ்மித் அதிரடி: இங்கிலாந்துக்கு 305 ரன்கள் இலக்கு!

அதிஷி தலைமையில் அமைச்சரவை முதல் கூட்டம்!

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு