புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கலந்த பெயரை ஆங்கிலத்தில் மாற்றக் கோரி வழக்கு.
மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் வைக்கப்பட்ட பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்து ஆங்கிலத்தில் மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நாட்டில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளதாகவும் 56.37 சதவிகித இந்தியர்களுக்கு ஹிந்தி தாய் மொழி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்றும் யாருடைய அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், சட்டங்களுக்கு பெயரிடும் விவகாரம் நாடாளுமன்றத்தின் முடிவு என்றும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.