புதுச்சேரியில் மின்கட்டணம் கிடுகிடு உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வராமல் இருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துள்ள நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 50 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.45 ஆக இருந்தது. அது தற்போது ரூ.1.95 ஆக உயர்ந்துள்ளது.

100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

உயர் மின்அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60-லிருந்து ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கான நிலைக்கட்டணம் ரூ.420-லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சிறு விவசாயிகளுக்கான நிலைக்கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்