புதுச்சேரியில் மீண்டும் சம்பவம்: கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு மூச்சு திணறல் – அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி,

ரெட்டியார்பாளையத்தை தொடர்ந்து புதுவை சாரத்தில் கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

புதுச்சேரி சாரம் குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 66). அவரது மனைவி பவானி (62). நேற்று காலை தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. உடனே உதவிக்காக அவர் தனது கணவரை அழைத்தார். உடனடியாக அவர் விரைந்து சென்றார். அப்போது அவருக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வீட்டில் இருந்தவர்களும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கழிவறையில் விஷவாயு கசிந்ததால் தம்பதி மயக்கம் அடைந்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரித்தனர்.

அதேபோல் அருகில் உள்ள மற்ற வீடுகளில் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று விசாரித்தனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் கடந்த சில நாட்களாக அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அந்த அடைப்பை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதியை கண்காணித்து வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்