புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது – மக்கள் அவதி

புதுச்சேரி,

புதுச்சேரியில் மின் கட்டணம் சமீபத்தில் கடுமையாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கட்டண உயர்வினை ரத்து செய்யவேண்டும், மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது, பிரீபெய்டு மின்மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'இந்தியா' கூட்டணி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

இந்த முழுஅடைப்பின்போது அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படுகின்றன. முழு அடைப்பு போராட்டத்தினை தொடர்ந்து, புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 'பந்த்' போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!