புத்திர தோஷத்தால் குழந்தைப் பேறு கிடைக்காதா?

அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நன்கு ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற கடவுளுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் புத்திர தோஷத்திற்கான பிரச்சினை தீரும்.

முதலில் நாம் ஒருவரை விசாரிக்கும் பொழுது கேட்கும் கேள்வி என்னவென்றால் 'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா, எத்தனை குழந்தைகள் உள்ளன?' என்பதை பற்றிதான். திருமணம் ஆனவுடன் நாம் முதலில் கேட்கும் கேள்வியும் ஏதாவது விசேஷம் உண்டா என்பதுதான். குழந்தை இல்லாத வீடு சூனியமாகத் தான் தெரியும். வீட்டிற்கு வரும்போது ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தையின் முகத்தை பார்க்கும்பொழுது அவை அனைத்தும் பறந்தோடும். ஒரு பெண் முழுமையடைகிறாள் என்றால் அது தாய்மை அடையும் பொழுதுதான் என்று சொல்கின்றனர். அப்படிப்பட்ட தாய்மை உணர்வை ஏற்படுத்தி தருவது தான் இந்த குழந்தைச் செல்வம். தாமதமாக குழந்தை பிறப்பதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றித்தான் நான் இதில் விவரிக்க இருக்கின்றேன்.

பொதுவாக புத்திர தோஷம் என்பதை குழந்தைகள இல்லாத வீடு தான் புத்திர தோஷம் என்று நினைக்கின்றனர். ஆனால், அது தவறான ஒன்றாகும். குழந்தை இருந்தும் அவன் தனக்கு பயன் அற்று இருப்பதுதான் அதாவது தம் பிள்ளை தமக்கு அவமானத்தை ஏற்படுத்தித் தந்தாலும் அது புத்திர தோஷம் தான்.

புத்திர தோஷத்தின் வகைகள்

*பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது.

*வரிசையாக ஆண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது

*உடல் ஊனமாக பிறப்பது.

*பெற்றோருக்கு அவப்பெயர் வாங்கித்தருவது

*பிறந்தவுடன் இறப்பது.

*பல ஆண்டுகள் கழித்து குழந்தை பிறப்பது.

*பிறந்த சில ஆண்டுகளிலேயே குழந்தை இறப்பது.

*சிறு வயதிலேயே விபத்தில் இறப்பது போன்றவைகள்தான்.

நாம் தற்போது பார்க்கப் போவது குழந்தை தாமதமாக பிறப்பது ஏன் என்பதைப்பற்றித்தான்

புத்திரதோஷம் என்றால் என்ன?

ஒருவரது ஜாதகத்தில் புத்திரஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது பாவ கிரகங்களின் பார்வைகள் பட்டிருந்தாலோ அல்லது அந்த வீட்டின் அதிபதி அவருடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அந்த வீட்டின் அதிபதி மறைவு ஸ்தானங்களில் வீற்றிருந்தாலோ மேலும் லக்னாதிபதி வலுவிழந்து இருந்தாலோ சர்ப கிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய ராகு கேதுக்கள் மிகவும் பலம் வாய்ந்து அமர்ந்திருந்தாலோ அந்ததானத்தை சுபகிரகமான குரு பார்க்காமல் இருந்தாலோ மேலும் புத்திரகாரகனான குருவின் நிலை மிகவும் மோசமாக அதாவது பலவீனப்பட்டு நீசமடைந்திருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படுகின்றது.

தாமதமாக குழந்தை பிறப்பதற்கு ஜாதக ரீதியான காரணம் என்ன?

தம்பதிகள் இருவரின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் பொழுது ஒருவருக்கு புத்திர தோஷம் ஏற்பட்டால் குழந்தைப்பேறு தாமதமாக கிடைக்கிறது. இதற்கு இன்னொரு காரணம் கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு புத்திர ஸ்தானம் என்று சொல்லப்படும் இடத்தில் பாவ கிரகங்கள் அமைந்திருந்தாலும் அதாவது சனி, சூரியன், செவ்வாய், ராகு, கேது அமைந்திருப்பது புத்திர தோஷத்தை ஏற்படுத்தித்தருகின்றது. அதாவது காலதாமதமான பிள்ளைப்பேறு ஏற்படுகிறது.

ஒரு சில ஜோதிடர்கள் ஐந்தாவது ஸ்தானமான புத்திர ஸ்தானத்தில் ராகு கேதுக்கள் இருந்தாலே அது புத்திர தோஷம் அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி விடுகின்றனர். அப்படிஅல்ல அந்த ஸ்தானத்தில் ஸ்தானத்தை யார் பார்க்கிறார்கள் அந்த ஸ்தானத்தில் இருக்கும் கிரகத்தின் அதிபதி எங்கே இருக்கிறார்கள் வந்துள்ளதா அல்லது வலுவற்று இருக்கின்றதா பற்றி நன்கு ஆராய்ந்து, ஒருவருக்கு திருமணம், குழந்தை இருக்குமா, இல்லையா? என்பதை சொல்ல வேண்டும். மேலும் புத்திர காரகனான குருவின் நிலை எப்படி உள்ளது என்பதை பற்றியும் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படியே ஒருவருக்கு புத்திர தோஷம் இருந்தாலும், புத்திர தோஷம் ஏற்பட்டாலும் வரக்கூடிய கணவர் அல்லது மனைவியின் ஜாதகத்தில் குழந்தை ஸ்தானம் நன்கு வலுவாக இருந்தால், நாம் திருமணத்தை நாம் இணைக்கும் பொழுது நிச்சயமாக புத்திரதோஷம் அடிபட்டு மாறாக பிள்ளை பெறுவர். சற்று தாமதமானாலும் நிச்சயமாக குழந்தைப் பேறு கிடைக்கும்.

தம்பதியர்களின் உதாரண ஜாதகம்

இந்த ஆண் ஜாதகர் மேஷ ராசி, பரணி நட்சத்திரம், லக்னம் மேஷம். இவரது புத்திர ஸ்தானத்தில் புத்திர தோஷத்திற்கான கிரகங்கள் ராகு மற்றும் சனி அமர்ந்துள்ளார். இப்படி அமைந்தால் இவர்களுக்கு புத்திர தோஷம் ஏற்படும் என்பர்.

ஆனால், இவரது ஜாதகத்தில் புத்திர காரகன் உச்சம் பெறுவதை கவனிக்க வேண்டும். பொதுவாக மேலோட்டமாக பார்த்தால் சில ஜோதிடர்கள் இவருக்கு புத்திர தோஷம் என்பர். ஆனால், இவருக்கு தாமதமாக குழந்தைப் பேறு உண்டு என்பது ஜாதக கணிப்பு. இவருக்கு திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்தது.

இவரது மனைவியின் ஜாதகத்தில் குழந்தைப் பேறு நிச்சயம் உண்டு என்பதாலும் இவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெண் ஜாதகர் மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், லக்னம் மீனம். இவரது புத்திர ஸ்தானத்தில் புத்திர தோஷத்திற்கான கிரகங்கள் ராகு மற்றும் சுக்கிரன் அமர்ந்துள்ளார். இப்படி அமைந்தால் இவர்களுக்கு புத்திர தோஷம் ஏற்படும் என்பர். ஆனால், இவரது ஜாதகத்தில் புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானாதிபதியை பார்க்கின்றார். அதாவது குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் லக்ன கேந்திரத்தில் அமர்ந்துள்ளதால் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. காலதாமதம் ஏற்பட்டாலும் குழந்தைப் பேறு உண்டாயிற்று.

ஆகவே, மேலோட்டமாக பார்த்துவிட்டு குழந்தை பிறக்காது என்று நினைப்பது தவறானதாகும். இருவரது ஜாதகத்தையும் நன்கு ஆராய்ந்தபின்னே முடிவெடுக்க வேண்டும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல் நன்கு ஆராய்ந்து பார்த்து நாம் அதற்கேற்ற கடவுளுக்கு ஏற்ற பரிகாரங்களை செய்தால் இந்த புத்திரதோஷத்திற்கான பிரச்சினை தீரும்.

பொதுவான பரிகாரம்

ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி திதி அன்று முருக பெருமானுக்கு விரதம் இருந்து முருக பெருமானை சேவிப்பது மிகவும் நன்று. பிள்ளைப் பேறுக்கான ஸ்தலங்களான திருக்கருகாவூர் சென்று வருவது.

ஜோதிடரை அணுகி ஜாதகத்தில் குழந்தை பெறும் காலங்களை அறிந்து அந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதும் முக்கியமான ஒன்று.

கட்டுரையாளர்: ஜோதிடர் ந.ஞானரதம், செல் 9381090389.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்