புரட்டாசி முடிந்து பட்டினப்பாக்கம் வந்த மக்களுக்குக் காத்திருந்த குழப்பம்!

சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பல கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டு திறக்கப்பட்டும் கூட, லூப் சாலையிலேயே இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 40க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கியதால் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

சாலையிலேயே மீன்கடைகள் இயங்குவதைப் பார்த்த மக்கள், அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டு மீன்வாங்கத் தொடங்கினர். ஆனால், அங்கிருக்கும் கடைகளில் மீன்வாங்கக் கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள், அறிவுறுத்தி, மீன் அங்காடிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனால், ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, லூப் சாலைக்கு வந்த மக்கள் மீன் வாங்காமல், திரும்ப தங்களது வாகனத்தை எடுத்துக்கொண்டு நவீன மீன் அங்காடி இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டியது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

புரட்டாசி மாதம் முடிந்து, முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதலே பட்டினப்பாக்கம் நோக்கி ஏராளமான மக்கள் வந்தனர். என்ன மீன் வாங்குவது, எவ்வளவு விலை இருக்கும் என்ற குழப்பத்தில் வந்தவர்களுக்கு எங்கே வாங்குவது என்பதே மிகப்பெரிய குழப்பமாகிவிட்டது.

லூப் சாலைகளிலும் மீன் அங்காடிகள் இயங்குகின்றன. ஆனால், அங்கே வாங்க விடாமல் அதிகாரிகள் நவீன மீன் அங்காடிக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள். ஒரு மாதம் கழித்து இங்கு வந்திருக்கிறோம். எல்லாமே மாறிவிட்டிருக்கிறது. ஆனால், மீன் அங்காடிக்குச் செல்ல சிறிது தூரம் நடக்க வேண்டியது இருப்பதால் வயதானவர்கள் அதனை தொல்லையாகக் கருதுகிறார்கள்.

மறுபக்கம், தங்கள் கடையில் மீன் வாங்க வருவோரை அங்காடிக்குச் செல்லுமாறு விரட்டும் அதிகாரிகளுடன் மீன் வியாபாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நவீன மீன் அங்காடிக்குச் செல்ல மறுக்கும் மீன் வியாபாரிகள் பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

தங்களுக்கு அங்காடியின் கடைசி மூலையில் கடை ஒதுக்கப்பட்டிருப்பதால், பலரும் தங்கள் கடைக்கு வருவதில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

சிலரோ, மீன் வியாபாரிகள் வேண்டுமானால், நவீன அங்காடியில் மீன்களை விற்கலாம். நாங்கள் நேரடியாக கடலில் மீன் பிடித்துவந்து வலையிலிருந்து பொதுமக்களுக்கு விற்கிறோம். நாங்கள் எதற்கு அங்குச் செல்ல வேண்டும் என்று அவர்களும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். இவர்களது பிரச்னை இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ளது.

இதில், நவீன மீன் அங்காடியில் விற்பனை செய்யும் வியாபாரிகளோ, பலரும், லூப் சாலையிலேயே இன்னமும் கடை வைத்திருப்பதால், வரும் மக்கள் எல்லோரும் அங்கேயே மீன் வாங்கிக் கொண்டு சென்றுவிடுவதால், இங்கே உள்ளே யாரும் வருவதில்லை. இதனால் மீன்வியாபாரம் பாதிக்கப்படுகிறது. முன்பெல்லாம் நாங்களும் சரி வாங்குவோரும் சரி வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்தோம். ஆனால் இங்கே நல்ல வசதிகள் உள்ளன. ஆனால், அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைத்தால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுறங்களிலும் மீன் அங்காடிகள் செயல்பட்டு வந்தன. இதனால் இப்பகுதியில் குறிப்பாக வார இறுதி நாள்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

அதனைச் சமாளிக்கும் வகையிலும், மீனவா்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையிலும், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டது.

இந்த நவீன மீன் அங்காடி சுற்றுச் சுவருடன் 366 மீன் அங்காடிகள், மீனவா்கள் மற்றும் பொது மக்களுக்கான குடிநீா், கழிப்பறை வசதிகள், மீன்களை சுத்தம் செய்ய தனியாக 2 பகுதிகள், இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 கி.லி கொள்ளளவு கொண்ட கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயா் கோபுர மின் விளக்குகள் என உருவாக்கப்பட்டுள்ளது.

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity