பூந்தமல்லி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: காயங்களுடன் 5 பேர் தப்பினர்
பூந்தமல்லி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன்(38). இவரது நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னைக்கு வந்துள்ளார். அவரை அழைத்துச் செல்வதற்காக பவன், 3 நண்பர்களுடன் ஆந்திராவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு காரில் வந்து, வெளிநாட்டிலிருந்து வந்த நண்பரை அழைத்துக்கொண்டு ஆந்திரா நோக்கி மீண்டும் காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை உடைத்துக் கொண்டு 400 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார கேபிள்களை பூமிக்கு அடியில் புதைப்பதற்காக சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்களை அவ்வழியாகச் சென்ற பிற வாகன ஓட்டிகள் மீட்டனர். இதில் சிறிய காயங்களுடன் பவன் உள்ளிட்ட 5 பேரும் உயிர் தப்பினர்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து, பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தகாரை கிரேன் உதவியுடன் மீட்டனர்.இதனால், அந்த சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.