பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கில், தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) பெங்களூரு மாநகரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(செப். 9) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில் முஸ்ஸாவீர் ஹுசைன் ஷாஸிப், அப்துல் மதீன் அகமது டாஹா, மாஸ் முனீர் அகமது, முழமில் ஷரீஃப் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளனர்.

என்ஐஏ குற்றப்பத்திரிகையில், கிரிப்டோ கரன்சி மூலம் மேற்கண்ட குற்றவாளிகள் நிதியுதவி பெற்று வந்ததாகவும், இந்த பணத்தைக் கொண்டு, அவர்கள் பெங்களூரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியதும் விசரணையில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா நாளன்று, பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மாநில பாஜக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்த சதித்திட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 1-ஆம் தேதியன்று பெங்களூரு புரூக்ஃபீல்டு பகுதியில் அமைந்துள்ள ராமேசுவரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பு நடத்தியுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில், உணவகம் சேதமடைந்த நிலையில், அங்கிருந்த 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் விசாரணையை கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் என்ஐஏ விசாரித்து வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நிக்ழ்ந்து 42 நாள்களுக்கு பின், மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான ஷாஸிப்பும் அவரது கூட்டாளியான டாஹாவும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கர்நடகத்தின் ஷிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்