பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது!
சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுஜித் கந்துல்னா. இவரது மனைவி மெபல் புனியா (20). சுஜித் கந்துல்னா மனைவியுடன் பெரம்பூரில் தங்கி, கட்டுமான வேலை பார்த்துவந்தார்.
சொந்த ஊர் செல்வதற்காக, தன்பாத் விரைவு ரயிலில் டிக்கெட் எடுத்திருந்தார். இருவரும் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். அப்போது, மெபல் புனியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பெண் பயணிகள், பெண் போலீஸார் மெபல்புனியாவுக்கு உதவியாக இருந்தனர்.
பிரசவ வலியால் துடித்த அவருக்கு சில நிமிடங்களில் அந்த இடத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் ஆம்புலன்ஸில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.ஏ.எம். அரசு மகப்பேறுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.