சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையேற்று 397 மாணவ-மாணவியருக்கு பட்டங்களை வழங்கினாா்.
பெரியாா் பல்கலைக்கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெரியாா் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவிக்கு துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய பேண்டு வாத்தியம் முழங்க ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார்.
பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் க.ஜ. ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினாா்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கு பட்டச் சான்றிதழை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவியருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டச் சான்றிதழை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
இதையும் படிக்க |சென்னைக்கு இனி பெரிய பாதிப்பில்லை! மிதமான மழையே தொடரும்!!
பெரியார் பல்கலைக்கழக 23-ஆவது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில் பட்டம் பெற்ற 397 மாணாக்கர்களுடன் சேர்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46,365 மாணாக்கர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணாக்கர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணாக்கர்களும் பட்டங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பெரியாா் பல்கலைக்கழக பதிவாளர் பெ.விஸ்வநாதமூர்த்தி, தேர்வாணையர் எஸ்.கதிரவன், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.