பேட்ஸ்மேன்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை தடுக்க மாட்டேன் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 16) பெங்களூருவில் தொடங்குகிறது.
அதிக ரிஸ்க், அதிக பலன்
பேட்ஸ்மேன்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை தடுக்க மாட்டேன் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வீரர்கள் அதிரடியாக விளையாடுவதை ஏன் தடுக்க வேண்டும்? அவர்களது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு நாளில் 400-500 ரன்கள் ஏன் குவிக்கக் கூடாது? நாங்கள் இதுபோன்று அதிரடியாக விளையாடுவோம். அதிக ரிஸ்க் எடுத்தால் அதிக பலன்கள் இருக்கிறது. அதேபோல அதிக ரிஸ்க் எடுத்து அதிக தோல்விகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்க:ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் விராட் கோலியை மதிப்பிட தேவையில்லை: கௌதம் கம்பீர்
அதிரடியாக விளையாடும்போது, 100 ரன்களில் ஆட்டமிழக்கும் நாள்களும் வரும். அதனை ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது வீரர்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். எந்த ஒரு சூழலிலும் இந்த முறையில் ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.
இரண்டு நாள்களுக்கு முழுமையாக பேட் செய்யும் வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அதனால், போட்டியில் வெல்வதே எங்களது முதன்மையான நோக்கம். போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற சூழலை இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவாக வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் எங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்புகிறோம். வேறு எந்த ஒரு புதிய முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
முற்றிலும் வித்தியாசமான சவால்
நியூசிலாந்து அணி முற்றிலும் வித்தியாசமான சவால். அவர்கள் மிக மிக சிறந்த அணி என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களிடம் உண்மையில் அதிக அளவில் தரமான வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வீரர்கள் நியூசிலாந்தில் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து போராடும் குணம் கொண்டவர்கள்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர் இல்லை!
அதனால், அவர்களுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. அவர்களது திறமையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நாங்கள் யாரைப் பார்த்தும் அச்சமடைய வேண்டியதில்லை. நியூசிலாந்தாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி ஒவ்வொரு போட்டியிலும் நாட்டுக்காக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடுவோம்.
இந்திய அணிக்கு அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மிகவும் முக்கியமானது. அதற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடர் உள்ளது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரே எங்களது கவனத்தில் உள்ளது என்றார்.
வங்கதேசத்துக்கு எதிராக அண்மையில் கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மழையால் இரண்டு நாள்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையிலும், இந்திய அணி அதன் அதிரடியான ஆட்டத்தால் வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.